பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 10 அக்டோபர், 2014

அக்பரும் பீர்பாலும் - அசலும் போலியும்

ஒரு நாள் மாறுவேடத்தில் மன்னர் அக்பரும், பீர்பாலும் நகர்வலம் வந்தனர். அச்சமயம் நடக்க முடியாதவர்களும், பார்வையற்றவர்களும் வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தனர்.இக்காட்சியைக் கண்ட அக்பரின் மனம் வேதனையடைந்தது. அதனால், பீர்பால் அவர்களே! ஊனமுற்ற இவர்களுக்கு நாம் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றார்.

ஊனமுற்றவர்கள் பிச்சை எடுப்பது என்பது ஒரு கொடுமையான செயலாகும். ஊனமுற்றர்களாகப் பிறந்தது அவர்களது குற்றம் இல்லை. செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் அளித்த தண்டனையாகும். ஆண்டவனுக்கு ஒப்பான அரசர் இதற்கு பரிகாரம் செய்வது நல்லதுதான் என்றார் பீர்பால்.இவர்களுக்கு என்ன செய்யலாம்? என வினவினார் மன்னர்.

இவர்களுக்கு உணவை நாமே அளித்தால் அவர்கள் பிச்சை எடுக்க மாட்டார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறிய யோசனை மன்னருக்கு சரியாகப் பட்டமையினால் மறுநாளே ஊனமுற்ற எல்லோருக்கும் இலவசமாக உணவு அளிக்கபட்டது.

இது நல்ல திட்டம் என்றாலும் சில சோம்பேறிகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்று நடித்து இலவச உணவை வாங்கி உண்பது அதிகமானது.

இதனால் நாட்டிலுள்ள சோம்பேறிகள் கூட்டம் நாளுக்கு நாள் இலவச உணவை வாங்கிச் செல்ல வந்தமையினால் அரசாங்கத்திலுள்ள உணவு களஞ்சியமே காலியாகி நிலைமை மோசமாகிவிட்டது.இதனை தடுத்திட நல்ல யோசனை ஒன்றை கூறிட அக்பர் பீர்பாலிடம் கோரினார்.

மன்னர் பெருமானே! இதற்காகக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். இதற்கான முடிவை நான் செய்கிறேன் என்றார் பீர்பால்.



மறுநாள் – ஊனமுற்றவர்களுக்காக இலவச உணவு வழங்கும் இடத்திற்கு சென்றார். பீர்பால் கூறியபடி இலவச உணவு வழங்கும் நேரம் தாமதப்படுத்தபட்டது.

இதனால் இலவச உணவு வாங்க காத்திருந்தவர்களிடையே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.அச்சமயம் ஒரு அரசு அதிகாரி அங்கே வந்தார். எதற்காக கூச்சலிடுகின்றீர்கள்? இன்று முதல் இலவச உணவு வழங்கும் இடம் அடுத்த தெருவிலுள்ள பெரிய சத்திரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது உணவு வழங்கி கொண்டிருக்கிறார்கள். ஆதலால் உடனடியாகச் செல்பவர்களுக்கு இப்போதே உணவு கிடைக்கும் என்றார்.

அரசு அதிகாரி கூறியதைக் கேட்டதும் – சற்றும் யோசனை செய்யாமல். ஊனமுற்றவர்கள் போன்று போலியாக நடித்தவர்கள் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு சத்திரத்தை நோக்கி ஓடினார்கள்.ஆனால் உண்மையில் ஊனமுற்ற பார்வையற்றவர்கள், கை-கால்களை இழந்தவர்கள் அந்த இடத்திற்குச் செல்வதற்கு துணையில்லாமல் தவித்தனர்.

உண்மையான ஊணமுற்றவர்கள் தவிப்பதைக் கண்ட பீர்பால் உடனடியாக அவர்களுக்கு உணவு வழங்குமாறு கட்டளையிட்டார். அவர்களும், சநதோஷத்துடன் உணவருந்தி சென்றனர்.இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட போலியானவர்கள் மீண்டும் பழைய இடத்தை நோக்கி வந்தனர். உணவளிக்கும் மேலதிகாரி அவர்களை எச்சரித்து போலியான நீங்கள் மீண்டும் வந்தால் கைது செய்து சிறைக்கு அனுப்பப்டுவீர்கள் என்றார்.

அன்று முதல் உண்மையான ஊனமுற்றவர்கள் மட்டுமே வந்து உணவருந்திச் சென்றனர். போலியானவர்கள் காணாமல் போயினர்.பீர்பாலின் அறிவு நுணுக்கத்தை புகழ்ந்து பாராட்டினார் மன்னர் அக்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக