பள்ளி விடுமுறை வந்துவிட்டால் போதும். என் மனம் தாத்தா–பாட்டி வீட்டிற்குப் பறந்துவிடும்.
அது ஒரு பெரிய கூட்டுக் குடும்பம். தாத்தா, பாட்டி, எட்டுப் பிள்ளைகள்—சிலருக்குத் திருமணமாகியிருந்தது; சிலர் படித்துக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் எப்போதும் பேச்சும் சிரிப்பும் சத்தமுமாக இருக்கும். தனிமை என்பதே அந்த வீட்டில் யாருக்கும் கிடையாது.
தாத்தா வாரந்தோறும் ஆனந்த விகடன், குமுதம் போன்ற புத்தகங்களை வாங்கி வருவார். தினமும் தினமலர் செய்தித்தாளும் வரும். அதனுடன் வரும் வாரமலரை நான் விடாமல் படிப்பேன்.
அதிலும் எனக்கு மிகவும் பிடித்தது சினிமா கிசுகிசு!
“பெயரில் நிலவைக் கொண்ட அந்த நடிகை…”
“மூன்றெழுத்து நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நாயகி…”
என்று படித்துவிட்டு,
“யாரைச் சொல்கிறார்கள்? இவராக இருக்குமோ? இல்லை, அவராக இருக்குமோ?”
என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு நானே துப்பறிவாளரைப்போல் யோசித்துக்கொண்டிருப்பேன்.
அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் மட்டுமல்ல; சில நேரங்களில் தாத்தாவின் கோபச் சத்தமும் கேட்கும்.
தாத்தாவுக்குக் கோபம் வந்தால் அதை பாட்டியிடம் காட்டுவார். பாட்டியைத் திட்டிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிடுவார்.
தாத்தா திட்டும்போது பாட்டி பெரும்பாலும் அமைதியாக இருப்பார். பதிலுக்கு எதுவும் பேச மாட்டார். ஆனால் அவர் வெளியே சென்ற பிறகு,
“எல்லாக் கோபத்தையும் என்கிட்டதான் காட்டணுமா?என்கிட்ட கத்தினா எனக்கு எப்படி தெரியும்?”
என்று தாத்தாவைக் கரித்துக் கொட்டுவார். சில நாட்களில் தனியாக உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்.
அதைப் பார்க்கும்போது எனக்குப் பாட்டிக்காக மிகவும் வருத்தமாக இருக்கும்.
ஆனால் சாயங்காலம் வந்ததும் (அன்று மட்டும் அல்ல , என்றுமே )பாட்டியே வேறு மாதிரி மாறிவிடுவார். முகத்தைக் கழுவுவார். முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் பூசிக்கொள்வார். நெற்றியில் அழகாகப் பொட்டு வைத்துக்கொள்வார்.தலைவாரி பூ வைத்துக்கொள்வார். பிறகு தாத்தாவின் வருகைக்காகக் காத்திருப்பார்.
தாத்தா வந்ததும் ஒன்றுமே நடக்காததுபோல் அவருக்குக் காஃபி போட்டுக் கொடுப்பார்.
இதைப் பார்த்து ஒருநாள் என்னால் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“பாட்டி, தாத்தா உங்களை அவ்வளவு திட்டினாரே! நீங்களும் ஒன்றுமே சொல்லவில்லை. இப்போ முகமெல்லாம் கழுவி, பவுடர் போட்டு, பொட்டு வைத்து யாருக்காகக்இத பண்றீங்க? தாத்தாவுக்காகத்தானே?”
பாட்டி பதில் சொல்லவில்லை.
“போடி, அதுலாம் அப்படித்தான்!” என்று சொல்லிவிட்டுத் சிரித்தார்.
ஆனால் அவர் முகத்தில் தோன்றிய அந்தச் சிறிய சந்தோஷத்தையும் வெட்கத்தையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.
இன்னொரு நாள் தாத்தாவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அருகில் அன்றைய குமுதம் புத்தகம் இருந்தது. அதைக் கையில் எடுத்த தாத்தா திடீரென்று என்னைப் பார்த்தார்.
“நான் ஏன் ஒவ்வொரு வாரமும் குமுதம் வாங்குறேன் தெரியுமா?” என்று கேட்டார்.
“கதை படிக்கிறதுக்கா? கிசுகிசு படிக்கிறதுக்கா?” என்றேன்.(அந்த வயதில் எனக்கு தோன்றியது அது மட்டுமே )
“அதெல்லாம் இல்லை.”
“அப்புறம் ஏன்?”
தாத்தா புத்தகத்தின் அட்டையை மெதுவாக வருடினார் .
“உன் பாட்டி பேர் குமுதம் இல்லையா? அதனால்தான் இந்தப் புத்தகத்தை வாங்குறேன்.”
அதைச் சொல்லும்போது வழக்கமாகக் கடுமையாகத் தெரியும் தாத்தாவின் முகத்தில் ஒரு குழந்தையைப் போன்ற சிரிப்பு தெரிந்தது.
அப்போது எனக்கு அது வேடிக்கையாக மட்டுமே இருந்தது. ஓ அப்படியா ?! என்று நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு ஓடிவிட்டேன்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
எப்போதும் மனிதர்களால் நிரம்பிய அந்த வீட்டில் தாத்தாவும் பாட்டியும் தனியாகப் பேசுவதற்கு எப்போது நேரம் கிடைத்திருக்கும்? மனதைத் திறந்து பேசுவதற்கு எந்த இடம் இருந்திருக்கும்? சண்டைக்குப் பிறகு எப்படி ஒருவரிடம் ஒருவர் மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்? எப்படி மீண்டும் சமாதானம் ஆகியிருப்பார்கள்?
ஒருவேளை அவர்கள் வார்த்தைகளால் சமாதானம் ஆகியிருக்கவே மாட்டார்கள்.
தாத்தா வாங்கிவந்த குமுதம் புத்தகம் அவருடைய “மன்னித்துவிடு” என்பதாக இருந்திருக்கலாம்.
பாட்டி போட்டுக் கொடுத்த ஒரு கப் காஃபி, “பரவாயில்லை, நான் இன்னும் உன்னோடுதான் இருக்கிறேன்” என்ற பதிலாக இருந்திருக்கலாம்.
தாத்தாவின் கோபம் சரியென்று நான் சொல்லவில்லை. பாட்டியின் கண்ணீரை அன்பு என்று அழகுபடுத்தவும் விரும்பவில்லை. உடலில் ஏற்படும் காயம் மட்டுமல்ல; மனதில் ஏற்படும் காயமும் காயம்தான்.
ஆனாலும் அந்தக் காயங்களுக்கு நடுவிலும் அவர்களுக்குள் ஏதோ ஓர் அன்பு இருந்திருக்கிறது. வெளிப்படையாகச் சொல்லப்படாத, மற்றவர்களுக்குப் புரியாத ஓர் அன்பு.
சில பழைய உறவுகளில் காதல் பெரிய வார்த்தைகளில் இல்லை.
அது ஒரு குமுதம் புத்தகத்திலும்…
மாலை நேரத்தில் போட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு கப் காஃபியிலும்…
யாருக்கும் தெரியாமல் அமைதியாக மறைந்திருந்தது.
இது என் வாழ்க்கையில நடந்தது .என் தாத்தா என்கிட்ட சொன்னது , என் பாட்டியை பாத்து நான் கேட்டது .